சனி, 1 ஜனவரி, 2011

என்ன கொண்டு வந்தாய் புத்தாண்டே?

மீண்டும் ஒரு புத்தாண்டு
தலைவர்களின் வாழ்த்துக்கள்
பழைய உறுதிமொழிகளே
உறுதியற்று கிட்டாது என
தொலைந்து போனதாக முடிவான நிலையில்
மீண்டும் தூசி தட்டி இன்று.

திரும்பி பார்க்கவே அஞ்சும்போது
விரும்பி பார்க்க எங்கிருக்கிறது எதிர்காலம்?
அரும்பிய ஆசைகள்
துரும்பு கிடைக்காதா என துவண்ட மனம்
பொறுப்புகளின் சுமையில் சலித்த தோள்கள்.

பெரிசுகளின் அந்த கால பெருமைகள்.
சிறிசுகளின் விடுமுறை குதூகலங்கள்.
புத்தாண்டானால் என்ன?
இரவில் தூங்க மறுப்பவர்களை தூங்கச் சொல்லி
பின் தூங்காமல் தூங்கி
அதிகாலையில் எழுந்த கோலமே
வாசலில் புத்தாண்டு வாழ்த்துகளாய்
விரியும் வீட்டு பெண்களின் ......
மீண்டும் ஒரு புத்தாண்டு.

என்ன சொல்லி என்ன?
இரண்டு நாள் விடுமுறையோடு
வந்த புத்தாண்டே
என்ன கொண்டு வந்திருக்கிறாய்?

எத்தனை ஊழல் செய்யும்
எத்தனை அரசிய்ல்வாதியாக
எத்தனை காலம்தான் பொறுப்பது?
அத்தனை வேலைகளும்
செய்யும் எந்திரன் செய்வது எப்போது?
எந்திரனும் காதலிக்கும்போது
செய்துவிடுமோ ஊழல்?
பயமாய் இருக்கிறது.

1 கருத்து:

  1. எல்லாருக்கும் நம்பிக்கையைக் கொண்டு வரும் புத்தாண்டு உங்கள் முகவரியை மறந்து விட்டது போல!

    நம்புங்கள் தோழரே, விடிந்து விட்டது என்று!

    பதிலளிநீக்கு