செவ்வாய், 20 அக்டோபர், 2009

குறள் கூறுவது என்ன?

குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.
மு.வ : நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
கருணாநிதி : குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.
சாலமன் பாப்பையா : நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம். 
இந்த கருத்துக்களில்  உள்ள முரண்பாடுகளை  பார்ப்போம்.
மு.வ கூறுவதிலிருந்து நற்பண்புகளை உடைய பெரியோர் சினம் கொண்டால் அதிலிருந்து யாரும் தப்ப முடியாது  என்கிறார்.
முரண் - 1. நற்பண்புகளை உடையோர் மலை  போன்ற அசையாத நிதானம் உடையவர்கள் சினங் கொள்வது எவ்வாறு?
முரண் - 2. கணப் பொழுதில் நிகழ்வதுதான் சினம். அதை தவிர்க்கும் குணம் இல்லாதார் எவ்வாறு பெரியோர் ஆக முடியும்?
சாலமன் பாப்பையா  அவர்கள் கூறுவதில் உள்ள முரண்பாடு
முரண் - 3. தமக்குள் கொண்டிருப்பதாக  குறள்  கூறுகிறது என்கிறார்.  அத்தகைய கருத்து உடைய  சொல்/ சொற்றொடர் குறளில் இல்லை.  கொண்டிருப்பது என்பது வேறு.  காத்தல்  என்பது வேறு.
கலைஞர் கூறுவதில் உள்ள முரண்பாடு
முரண் - 4 'நிலைத்து நிற்பது'  என்பது வேறு.  'காத்தல்'  என்பது வேறு.
என் கருத்தை  வெளியிடுமுன் சரவணன்  அவர்களின் கருத்து என்ன?