புதன், 13 ஜூலை, 2011

உதகை காவிய முகாம் அனுபவங்கள் - 1

எனது உதகை காவிய முகாம் அனுபவங்களை நண்பர் கிரி அவர்கள் தமது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பதிவினை சிரமம் பாராமல் சிரத்தையுடன் செப்பனிட்ட பாஸ்கருக்கும் வெளியிட்ட கிரி அவர்களுக்கும் நன்றி.

அறிவிப்பு

ஜெயமோகன் அவர்களின் காவிய முகாம் உதகையில் நடந்தது. அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அந்த அனுபவங்களை சுருக்கமாக இன்னொரு பதிவரின் வலைப் பூவில் வெளிவர இருக்கிறது. விரிவான கட்டுரைகள் எனது முடிக்கப் படாத சிறிய தொடர்கள் முடிந்த பின்னர் வெளிவரும்.

மணிமேகலை இயம்பும் கணிதமும், அந்த நாளும் வந்திடாதோ ஆகியன நீண்டத் தொடர்கள்.

மணிமேகலை கட்டுரையில் முதலில் முதல் 26 காதைகளுக்கு நாவலர் பண்டித. ந.மு.வெங்கடசாமி நாட்டாரவர்களும், இறுதி 4 காதைகளுக்கு பேராசிரியர் ஒளவை சு.துரைசாமிப் பிள்ளையவர்களும் உரை எழுதியுள்ளனர். எளிய தமிழில் பேராசிரியர். துரை.தண்டபாணி எழுதியுள்ளார். இவருடைய உரையை உமா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

அதனையே எடுத்து எழுதுகிறேன்.
வேறு யாருமே உரை எழுதவில்லை என்பது வியப்புக்கு உரியது.

சமயக் கணக்கர் தம் திறங்கேட்ட காதைக்கு இதுவரை எந்த கணித ஆசிரியரும் விளக்க முன் வரவில்லை என்பது வேதனைக்கு உரியது.

எனவேதான் இதிலுள்ள கணித நுட்பங்களை எளிய தமிழில் ஆய்ந்து எழுதவிருக்கிறேன்.

செவ்வாய், 12 ஜூலை, 2011

சித்தர் பாடல்களில் நான் அறிந்தது - 2

அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்குப்
பல்லாக்கு ஏதுக்கடி – குதம்பாய்
பல்லாக்கு ஏதுக்கடி ?

இது குதம்பை சித்தர் பாடியது.
தெளிவாக சொற்கள் விளங்கினாலும் இதன் உள்ளர்த்தங்கள் பல இருக்கின்றன.

திருக்குறளில், ‘அறத்தாறு இதுவென வேண்டா சிவிகையோடு பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை’ எனத் திருவள்ளுவர் குறிப்பிட்டதை இங்கு ஒப்பிட்டு பார்க்கலாம்.

அல்லல் எது?

அதை நீக்குவது எங்ஙனம்?

அதனை நீக்கி அறிவோடு இருப்பவருக்கு ஏன் பல்லாக்கு தேவையில்லை என்று வினாக்களை எழுப்பினால் நமக்கு சில கருத்துக்கள் தோன்றுகின்றன.

1. மேலார்ந்த பொருள் அல்லலை விரும்பாததால்தான் பல்லக்கில் செல்ல விரும்புகின்றனர்.

2. உள்ளார்ந்த பொருளாக இந்த உடல் அல்லல் படுகிறது. எனவே பல்லக்கில் செல்ல மனம் விரும்புகிறது. ஆனால் அறிவோடு இருப்பவர்களுக்கு மெய்ஞ்ஞானம் அடைய விரும்புவோர் உடல் அல்லல்படுவதை பொருட்படுத்துவதில்லை. எனவே அவர்களுக்கு பல்லக்கு தேவையில்லை.

3. திருவள்ளுவர் கூறும்போது அறத்தின் வழி இது எனக் கொள்ள வேண்டாம் என்கிறார். எது? சிவிகையோடு பொறுத்தான் சிவிகையில் இருப்பவன். அதாவது சிவிகையை இந்த உடலில் உள்ள உயிர் என்று கருதினால் சிவிகையை சுமப்பவனாக பூமி வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை, அல்லல்களை சுமப்பவராக நம்மைக் கருதிக் கொண்டால் மெய்ஞ்ஞான அறிவுடன் இருப்பவன் பற்ற்ற்ற இறைவனைப் பற்றுவதற்காக பல்லக்கில் ஏறும் பற்றைக் கூட விடுபவன் எனப் பொருள் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்.

4. பல்லக்கு, சிவிகை, தூக்கு என மூன்று இருக்கிறது. இதில் தூக்கு ஒருவர் தூக்கிச் செல்வது. சிவிகை இருவர் தோளில் சுமப்பது. பல்லக்கு தலைக்கு மேலே நால்வரோ, அதற்கு மேற்பட்ட பலரோ சுமப்பது. இங்கு பல்லக்கை குறிப்பிடுவதின் காரணம் மனிதனுக்கு பல பொறுப்புகளும் கடமைகளும் உண்டு என்பதைனையே சுட்டி காட்டுகிறது.

5. அல்லலை நீக்கினால் இன்பம் ஏற்படுகிறது. அறிவுடன் இருப்போர்க்கு ஆன்ந்தம் ஏற்படுகிறது. பல்லக்கில் இருப்பவர்களுக்கும் இத்தகைய இன்பமே கிட்டுகிறது. ஆனால் பல்லக்கை சுமப்பவர்களுக்கு எப்படி இன்பம் ஏற்படும்? முதலாவதாக, தூக்கு, சிவிகை முதலியவற்றை சுமப்பவர்களுக்கு ஏற்படும் துன்பத்தை விட பல்லக்கை சுமப்பவர்களுக்கு குறைவுதான். பல்லக்கை சுமப்பவர்களுக்கு சுமக்கிறமே என்கிற பெருமித உண்ர்வே மேலிடும்.