வியாழன், 17 ஜூன், 2010

வள்ளுவர் குறிப்பிட்டது நர்ஸைய்யா, கம்பவுண்டரையா?

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்(று)
அப்பானால் கூற்றே மருந்து.

என்ற குறள் கூறும் கருத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கீழ்க்கண்ட சுட்டிகளில் கூறப்பட்டுள்ளது.
http://vaarththai.wordpress.com/2010/06/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D/

http://vaarththai.wordpress.com/2010/06/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D/

பரிமேலழகரின் முழுமையான உரை கீழே அனைவரும் புரியும் வண்ணம் எளிமையான
தமிழில் தரப்பட்டுள்ளது.
மருந்து – நோய்க்கு மருந்தாவது
உற்றவன் – அதனை உற்றவன் (அதாவது நோயுற்றவன்)
தீர்ப்பான் – அதனைத் தீர்க்கும் மருத்துவர்
மருந்து - அவனுக்கு கருவியாகிய மருந்து
உழைச் செல்வான் என்ற அப்பால் நாற்கூற்று – அதனை நேரம், அளவு தவறாமல் நோயாளிக்கு தருபவன் என்று சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது.

நான்கு என்ற எண் வருகிறதால், அப்பால் என்று கூறினார். நான்கு கூறு என்பதன் விளக்கம்.

உற்றவன் வகை நான்கு – 1) பொருளுடைமை 2) மருத்துவன் கூறியபடி நடத்தல் 3)நோயின் நிலை உணரும் சக்தி 4)மருந்தினால் ஏற்படும் விளைவுகளையும், துன்பத்தையும் பொறுத்தல்.

தீர்ப்பான் வகை நான்கு – 1) நோய்கண்டு அஞ்சாமை 2) கல்வியும் நுண்ணறிவும் இருத்தல். 3) மிகுந்த அனுபவம் 4) மன சுத்தம், உடல் சுத்தம், வாக்கு சுத்தம் கொண்டவராய் இருத்தல்.

மருந்தின் வகை நான்கு – 1) பல விதமான நோய்களுக்கும் ஏற்றதாக இருத்தல் 2)சுவை, வீரியம், விளைவு முதலியவற்றில் மேம்பட்டு இருத்தல் 3)எளிதாக நோயாளிக்கு தரும்படி இருத்தல் 4) குறிப்பிட்ட நோய்க்கு பொருத்தமானதாய் இருத்தல்.

இயற்றுவான் வகை நான்கு – 1) அன்புடையவராயிருத்தல் 2) மனம், வாக்கு, உடல் சுத்தமாயிருத்தல் 3) மருத்துவர் கூறியவாறு மருந்தை அளித்து, நோயாளியை பராமரித்தல் 4) மருத்துவ அறிவுடையவராய் இருத்தல்.

இவையெல்லாம் ஒன்று இணைந்தால் ஒழிய நோய் தீராது என்பதால் இத்தொகுதியையும் மருந்து என்றார்.

பரிமேலழகர் மருந்தினைப் பிழையாமல் இயற்றுவான் என்று கூறுகிறார். இதற்கு பல பொருள் இருந்தாலும் இங்கு கூட இருந்து உதவுபவரைக் குறிக்கிறது என்பதற்கு ஆதாரம் பழைய உரைகளில் இருக்கிறது.
அதாவது பரிகாரம் பண்ணுபவன் என்பார் பரிப்பெருமாள். நோயாளிக்கு கூட இருந்து உதவுபவன் என்பது காளிங்கரின் உரை. பரிமேலழகருக்கு அடுத்ததாக சிறந்து விளங்குவது காளிங்கரின் உரை என்பதால் அவரது உரையே சரி என ஏற்கிறேன். இங்கு நர்சைத் தான் குறிப்பிடுகிறார். மருந்தை தயாரிப்பவர் அல்ல.